திருக்குறள் - 1139     அதிகாரம்: 

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.

குறள் 1139 - திருவள்ளுவர் - ThiruValluvar

"arikilaar ellaarum endrae en kaamam" Thirukkural 1139 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


என்னை யொழிந்த எல்லாரும் அறிவிலரென்றே சொல்லி என் காமமானது தலை மயங்கி மறுகின் கண்ணே வெளிப்படச் சுழலா நின்றது. சுழல்தல் - இவ்வாறு சொல்லித் திரிதல்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) எல்லாரும் அறிகிலார் என்று - யான் முன் அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர், இனி அவ்வாறு நில்லாது யானே வெளிப்பட்டு அறிவிப்பல் என்று கருதி; என் காமம் மறுகில் மருண்டு மறுகும் - என் காமம் இவ்வூர் மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது. (மயங்குதல் - அம்பலாதல், மறுகுதல் - அலராதல், 'அம்பலும் அலருமாயிற்று'. இனி 'அறத்தொடு நிற்றல் வேண்டும்', என்பதாம் 'அறிவிலார்' என்பதூஉம் பாடம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) என் காமம்-எனது காமம் ; எல்லாரும் அறிகிலார் என்று - யான் இதுவரை அடங்கி நின்றதால் எல்லாரும் என்னை அறிந்திலர் , இனிமேல் அவ்வாறிராது நானே வெளிப்பட்டறிவிப் பேனென்று எண்ணி ; மறுகில் மருண்டு மறுகும் - இவ்வூர்ப் பெருந் தெருவெல்லாம் மயங்கிச் சுழலும் . மயங்குதல் அலரத் தொடங்குதல் ; மறுகுதல் அலராதல் . இனி அறத்தொடு நிற்றல்வேண்டும் என்பது குறிப்பு . அறிவிலார் என்பதும் பாடம் .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


எல்லாரும் அறியமுடியாது என்றே என் காமம் மறைக்க முடியாமல் மறைந்திருப்பதாக சபலமடைகின்றது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


பொறுத்திருந்ததனாலே எல்லாரும் அறிந்தாரில்லை என்று நினைத்தே, என் காமநோயானது, இவ்வாறு தெருவிலே பலரும் அறியுமாறு மயங்கித் திருகின்றது போலும்!

Thirukkural in English - English Couplet:


'There's no one knows my heart,' so says my love,
And thus, in public ways, perturbed will rove.

ThirukKural English Meaning - Couplet -Translation:


My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).

ThiruKural Transliteration:


aRikilaar ellaarum endrae-en kaamam
maRukin maRukum marundu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore