திருக்குறள் - 923     அதிகாரம்: 
| Adhikaram: kallunnaamai

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.

குறள் 923 - திருவள்ளுவர் - ThiruValluvar

"eendraal mukaththaeyum innaadhaal enmatruch" Thirukkural 923 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னைப்பயந்தாள் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்: அங்ஙனமாகச் சான்றோர் முன்பு களித்தல் மற்றியாதாகும்? எல்லார் முன்பும் இன்னாமையே பயப்பதென்றவாறாயிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது - யாது செய்யினும் உவக்கும் தாய் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்; மற்றுச் சான்றோர் முகத்து என்? - ஆனபின், குற்றம் யாதும் பொறாத சான்றோர் முன்பு களித்தல் அவர்க்கு யாதாம்? (மனம் மொழி மெய்கள் தம் வயத்த அன்மையான், நாண்அழியும், அழியவே, ஈன்றாட்கும் இன்னாதாயிற்று, ஆனபின், கள் இருமையும் கெடுத்தல் அறிந்து சேய்மைக்கண்ணே கடியும் சான்றோர்க்கு இன்னாதாதல் சொல்ல வேண்டுமோ?என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது - மக்கள் எக்குற்றஞ் செய்யினும் பொறுத்துக் கொள்ளும் மட்டற்ற அன்புள்ள தாய் முன்பும் கள்ளுண்டு வெறித்தல் துன்பந் தருவதாம்;மற்றுச் சான்றோர் முகத்து என்- பின்பு ; எக்குற்றமும் பொறாத அறிவுடையோர் முன் அது எத்தகையதாம்? ஐம்புலனு மடங்கி அடியோடு உணர்விழத்தலும், வாய்காவாது மறைவெளிப்படுத்தலும் பித்தர்போற் பிதற்றலும்,ஆடை விலகலும் அற்றம் மறையாமையும், தீநாற்றம் வீசுதலும், வாய் நுரைதள்ளுதலும், வழியிற் கிடத்தலும் வழிப்போக்கர் பழித்தலும், ஈமொய்த்தலும், இளஞ்சிறார் சிரித்தலும், கண்ணாரக்காணின் , பெற்றதாயும் பொறாது கண்டனஞ் செய்வளாதலின், கள்ளக் கண்ணாலுங் காணப் பொறாது நெடுந்தொலைவில் நீங்கும் தூயவொழுக்கமுள்ள சான்றோர்க்கு, அக்காட்சி அளவிறந்த அருவருப்பையும் வெறுப்பையும் விளைக்கும் என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை யென்பதாம்.உம்மை உயர்வு சிறப்பு.'மற்று' பின்மைப் பொருளது. 'ஆல்' அசைநிலை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஈன்றவளே முகம் சுளிக்கும் துன்பம் தரும் கள்போதையை எப்படி சான்றோர்கள் சகித்து முகம் மலர்கள்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


எது செய்தாலும் உவப்படையும் தாயின் முன்பும் கள்ளுண்டு களித்தல் இன்னாததாகும்; அவ்வாறானால், குற்றம் எதனையுமே பொறாத சான்றோர்களின் முன் என்னவாகும்.

Thirukkural in English - English Couplet:


The drunkard's joy is sorrow to his mother's eyes;
What must it be in presence of the truly wise?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?.

ThiruKural Transliteration:


eendraal mukaththaeyum innaadhaal enmatruch
chaandroar mukaththuk kaLi.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore