திருக்குறள் - 423     அதிகாரம்: 
| Adhikaram: arivutaimai

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

குறள் 423 - திருவள்ளுவர் - ThiruValluvar

"epporul yaaryaarvaaik kaetpinum apporul" Thirukkural 423 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


யாதொரு பொருளை யாவர் சிலர் சொல்லக் கேட்பினும் அப்பொருளினது உண்மையை யாராய்வது அறிவாவது. இது யாவர் சிலர் நட்டோராயினும் பகைவராயினும் அவர் கூறக் கேட்டவற்றில் தெள்ளியராய் ஆராய்ந்து துணித லறிவென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு. (குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர்வாயினும், கெடுபொருள் நட்டார்வாயினும், ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்றார். அடுக்கு, பன்மைபற்றி வந்தது. 'வாய்' என்பது அவர் அப்பொருளின்கண் பயிலாமை உணர்த்திநின்றது. மெய்யாதல், நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காது, அப்பொருளின் பயன் நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும்-எப்பொருள் எவரெவர் சொல்லக் கேட்பினும்;அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப்பொருளின் உண்மையான பொருளைக் காணவல்லது அறிவு. தேவிகம் (சாத்துவிகம்), மாந்திகம் (இராசதம்), பேயிகம் (தாமதம்) என்னும் முக்குணங்களும் பெரும்பாலர்க்கு மாறி மாறி வருவதால், நற்பொருள் பகைவர் வாயினும் தீப்பொருள் நண்பர் வாயினும், சிறந்த பொருள் இழிந்தோர் வாயினும் இழிந்தபொருள் சிறந்தோர் வாயினும், கேட்கப்படுதலால் , 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்றார். அடுக்குத்தொடர் பன்மைபற்றிவந்தது. வாய் என்பது சொல்லும் பொருட்கு ஏற்காமையுணர நின்றது. சொல்வாரை நோக்காது சொல்லும் பொருளையே நோக்கி, கொள்ளுவது அல்லது தள்ளுவது அறிவென்பதாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


எந்த ஒரு பொருளைப் பற்றியும் யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளினுடைய உண்மையான கருத்தின் பயனைக் காணும் வல்லமையுள்ளது அறிவாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


எதைபற்றியும் யார் யார் என்ன சொல்ல கேட்பினும் அதைப்பற்றிய உண்மையான பொருளை காண்பதே அறிவு.

Thirukkural in English - English Couplet:


Though things diverse from divers sages' lips we learn,
'Tis wisdom's part in each the true thing to discern.

ThirukKural English Meaning - Couplet -Translation:


To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.

ThiruKural Transliteration:


epporuL yaaryaarvaaik kaetpinum apporuL
meypporuL kaaNpa thaRivu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore