திருக்குறள் - 448     அதிகாரம்: 

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

குறள் 448 - திருவள்ளுவர் - ThiruValluvar

"itippaarai illaadha emaraa mannan" Thirukkural 448 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கழறுவாரை யில்லாத காவலில்லாத அரசன் தன்னைப் பகைவராய் வந்து கெடுப்பார் இல்லையாயினும் தான் வேண்டியவாறொழுகிக் கெடும். இஃது உயிர்க்குக் கேடு வருமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் - சுழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன், கெடுப்பார்இலானும் கெடும் - பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடும். ('இல்லாத, ஏமரா' என்பன பெயரெச்ச அடுக்கு. கெடுப்பார் உளராவர் என்பது தோன்ற, 'இலானும்' என்றார். தானே கெடுதலாவது: பாகனில்லாத யானைபோல நெறியல்லா நெறிச் சென்று கெடுதல்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் -குற்றங் கண்டவிடத்துக் கடிந்துரைத்தற் குரியாரைத் தனக்குத்துணையாகக் கொள்ளாத காப்பற்ற அரசன்; கெடுப்பார் இலானும் கெடும்- தன்னைக் கெடுக்கும் பகைவர் இல்லையாயினும் தானே கெடுவான். 'இல்லாத ஏமரா ' என்னும் பெயரெச்ச வடுக்கு கரணிய (காரண) கருமிய (காரிய)ப் பொருளது. ஏ+மரு(வு)=ஏமரு. ஏமருதல் காப்புறுதல். உம்மை எதிர்மறை குறித்த வைத்துக்கொள்வுப் பொருளது. தானே கெடுதல் , ஓட்டுநன் இல்லாத வண்டியிழுக்குங் காளை நெறியல்லா நெறிச்சென்று பள்ளத்தில் விழுந்து கெடுவது போன்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


நெருங்கிப் புத்தி சொல்லும் பெரியார்களைத் துணையாகக் கொள்ளாத காவலற்ற அரசன், பகையாய்க் கெடுப்பவர்கள் இல்லாவிட்டாலும் தானே கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அறியாமையை அழிப்பவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன் ஆட்சி அழிப்பார் இன்றியே அழியும்.

Thirukkural in English - English Couplet:


The king with none to censure him, bereft of safeguards all,
Though none his ruin work, shall surely ruined fall.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him.

ThiruKural Transliteration:


itippaarai illaadha Emaraa mannan
ketuppaa rilaanunG kedum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore