திருக்குறள் - 1211     அதிகாரம்: 

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.

குறள் 1211 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kaadhalar thoodhodu vandha kanavinukku" Thirukkural 1211 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நங்காதலர் விட்ட தூதரோடே வந்த கனவினுக்கு யான் யாது விருந்து செய்வேன்?. இது தலைமகளாற்றுதற் பொருட்டுக் காதலர் வாராநின்றாரென்று தூதர் வரக் கனாக் கண்டேனென்று தோழி சொல்லியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது , தலைமகள் தான் கண்ட கனவினது நிலைமையைத் தோழிக்குச் சொல்லுதல் . அக் கனவு, நனவின்கண் நினைவு மிகுதியாற்கண்டதாகலின் , இது நினைந்தவர் புலம்பலின் பின் வைக்கப்பட்டது .] (தலைமகன் தூது வரக் கண்டாள் சொல்லியது). காதலர் தூதொடு வந்த கனவினுக்கு -யான் வருந்துகின்றது அறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதினைக் கொண்டு என் மாட்டு வந்த கனவினுக்கு; விருந்து யாது செய்வேன் -விருந்தாக யாதனைச் செய்வேன்? ('விருந்து' என்றது விருந்திற்குச் செய்யும் உபசாரத்தினை. அது கனவிற்கு ஒன்று காணாமையின், 'யாது செய்வேன்' என்றாள்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தலைமகனிடமிருந்து தூதுவரக் கண்டாள் சொல்லியது.) காதலர் தூதொடு வந்த கனவினுக்கு - யான் வருந்துதலறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதைக் கொண்டு வந்து காட்டிய கனவிற்கு; விருந்து யாது செய்வேன் - விருந்தாக நான் எதனைச் செய்வேன்! விருந்து என்னுஞ்சொல் விருந்தாளையும் விருந்துணவையுங் குறிக்கும். இங்கு விருந்தென்றது விருந்திற்குப் படைக்குஞ் சிறப்புணவை. கனவிற்குப் படைப்பதொன்றின்மையின், 'யாது செய்வேன்' என்றாள். 'கொல்' அசைநிலை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


காதலரை இணைக்கும் தூதொடு வந்த கனவிற்கு என்ன செய்வேனோ எவ்வகையில் செய்வேனோ விருந்து.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


பிரிவால் வருந்திய நான் அயர்ந்து கண் உறங்கிய போது, காதலர் அனுப்பிய தூதோடும் வந்த கனவுக்கு, யான் விருந்தாக என்ன கைம்மாறு செய்யப் போகின்றேன்!

Thirukkural in English - English Couplet:


It came and brought to me, that nightly vision rare,
A message from my love,- what feast shall I prepare?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Where with shall I feast the dream which has brought me my dear one's messenger ?.

ThiruKural Transliteration:


kaadhalar thoodhodu vandha kanavinukku
yaadhusey vaenkol virundhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore