திருக்குறள் - 1163     அதிகாரம்: 
| Adhikaram: patarmelindhirangal

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.

குறள் 1163 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kaamamum naanum uyirkaavaath thoongum en" Thirukkural 1163 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


வேட்கையும் நாணமும் என்னுயிரே காத்தண்டாகத் தூங்கா நின்றன, பொறுக்கமாட்டாத என்னுடம்பினுள்ளே நின்று. (காத்தண்டாக- காவடித்தண்டாக: தூங்குதல்- தொங்குதல்) இது தலைமகள் மனமகிழ்ச்சி யிதுவென்று கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) காமமும் நாணும் - காமநோயும் அதனைச் செய்தவர்க்கு உரைக்கல் ஒல்லாத நாணும்; நோனா என் உடம்பின் அகத்து - தம்மைப் பொறாத என்னுடம்பின் கண்ணே; உயிர் காவாத் தூங்கும் - உயிர் காத்தண்டாக அதன் இரு தலையிலும் தூங்காநின்றன. (பொறாமை மெலிவானாயது. தூங்கும் என்பது, ஒன்றினொன்று மிகாது இரண்டும் ஒத்த சீர என்பது தோன்ற நின்றது. 'தூது விடவும் ஒழியவும் பண்ணுவனவாய காம நாண்கள் தம்முள் ஒத்து உயிரினை இறுவியா நின்றன. யான் அவற்றுள் ஒன்றின்கண் நிற்கமாட்டாமையின், இஃது இற்றே விடும்' என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) காமமும் நாணும் - என் காமநோயும் அதை யுண்டாக்கியவர்க்கு உரைப்பதைத் தடுக்கும் நாணமும்; நோனா என் உடம்பின் அகத்து - அவற்றைத் தாங்காது வருந்தும் என் உடம்பினிடத்து ; உயிர் காவாத் தூங்கும் - என் உயிரைக் காவட்டுத் தண்டாகக் கொண்டு அதன் இரு கடையிலுந் தொங்குகின்றன. காமமும் நாணமும் ஒத்த இருதலைச் சுமைகளாக வருத்துவது தோன்றக் 'காவாத்தூங்கும்' என்றும் உயிரிருப்பதனாலேயே காமமும் நாணமுந் தோன்றுவதால் ' உயிர் காவா' என்றும் , காவாட்டுச் சுமையைத் தாங்கும் வலிமை நோயால் மெலிந்துள்ள உடம்பிற் கின்மையால் 'நோனாவுடம்பினகத்து' என்றும் , கூறினாள் . நோயும் நீங்காது நோய்நீக்கும் வழித்தடையும் நீக்காது இருதலைக் கொள்ளி யெறும்புபோல் இடர்ப்படுகின்றேன் என்பதாம். உடம்பைக் காவுவோனாக உருவகியாமையால் இது ஒரு மருங்குருவகம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


காதல் துன்பத்தையும், அவரிடம் சொல்ல முடியாமல் நான்படும் வெட்கத்ததையும் தாங்க முடியாத என் உடம்பில், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு அதன் ஒரு புறத்தில் காதல் நோயும், மறுமுனையில் வெட்கமும் தொங்குகின்றன.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பிரிவைத் தாங்கமுடியாது உயிர் துடிக்கும் என் உடலானது, ஒருபுறம் காதல் நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகிறது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


காமமும் நாணமும் என் மனதில் உயிர் என்ற காவரத் தண்டால் நிலைபெறுகிறது வலி அற்ற உடம்பில் வலி உண்டாக்க.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


பிரிவுத் துயராலே நலியும் என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு, காமமும் நாணமும் இருபாலும் சம எடையாகத் தூங்குகின்றனவே?

Thirukkural in English - English Couplet:


My soul, like porter's pole, within my wearied frame,
Sustains a two-fold burthen poised, of love and shame.

ThirukKural English Meaning - Couplet -Translation:


(Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them.

ThiruKural Transliteration:


kaamamum naanum uyirkaavaath thoongum-en
noanaa udampin akaththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore