திருக்குறள் - 115     அதிகாரம்: 
| Adhikaram: natuvu nilaimai

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

குறள் 115 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kaedum perukkamum illalla nenja" Thirukkural 115 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கேடுவருதலும் ஆக்கம் வருதலும் உலகத்தில்லையல்ல: அவ்விரண்டினுள்ளும் யாதானுமொன்று வந்த காலத்துத் தன்னெஞ்சு கோடாம லொழுகல் சான்றோர்க்கு அழகாம்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கேடும் பெருக்கமும் இல் அல்ல - தீவினையால் கேடும், நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி - அவ்வாற்றை யறிந்து அவை காரணமாக மனத்தின்கண் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழகாவது. (அவை காரணமாகக் கோடுதலாவது, அவை இப்பொழுது வருவனவாகக் கருதிக் கேடு வாராமையைக் குறித்தும் பெருக்கம் வருதலைக் குறித்தும் ஒருதலைக்கண் நிற்றல். 'அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதல் அன்று என உண்மை உணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை அழகு செய்தலின், சான்றோர்க்கு அணி' என்றார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கேடும் பெருக்கமும் இல் அல்ல - பழம் பிறப்பிற் செய்த தீவினையாற் கேடும் நல்வினையால் ஆக்கமும் ஏற்கெனவே எல்லார்க்கும் வகுக்கப்பட்டிருத்தலால் , அவை இப்பிறப்பில் யார்க்கும் இல்லாத வையல்ல ; நெஞ்ச்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி - ஆதலால் இவ்வுண்மையறிந்து வரும் பிறப்பிலும் கேடு நேராதவாறு மனத்துக்கண் ஒருபாற் கோடாமை , அறிவுநிறைந்தோர்க்கு அழகாம். அறிவுநிறைந்தோரும் உண்மையறியாது நடுவிகந்தா மாக்கம் விரும்பி ஒருபாற் கோடுவராயின் , தம் சிறப்பிழந்து பிறர்போலாவர் என்பது கருத்து.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


கெடுதியும் பெருக்கமும் யாவர்க்கும் இல்லாததல்ல; அவை பிறவியிலேயே அமைந்து கிடைப்பனவாகும். ஆதலால், மனத்தில் ஓரவஞ்சனையின்றி - ஒரு பக்கமாகச் சாய்ந்துவிடாமல் நடுவு நிலைமையுடன் இருப்பதே பெரியவர்களுக்கு அழகாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கெடுவதும் பெருகுவதும் இல்லாமல் இருக்காது மனசாட்சிக்கு மாறுபாடு அற்று இருப்பதே உதாரணமாக வாழ்பவருக்கு அழகு.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


பொருள் கேடும், பொருள் பெருக்கமும் வாழ்வில் இல்லாதன அல்ல; நெஞ்சத்தில் என்றும் நடுவுநிலைமை கோணாதிருப்பதே சான்றோர்க்கு அழகாகும்.

Thirukkural in English - English Couplet:


The gain and loss in life are not mere accident;
Just mind inflexible is sages' ornament.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both).

ThiruKural Transliteration:


kaedum perukkamum illalla nenjaththuk
koadaamai saandrork KaNi.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore