திருக்குறள் - 904     அதிகாரம்: 
| Adhikaram: penvazhichcheral

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.

குறள் 904 - திருவள்ளுவர் - ThiruValluvar

"manaiyaalai anjum marumaiyi laalan" Thirukkural 904 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மனையாளை அஞ்சுகின்ற மறுமைப் பயனெய்தாதவன் ஒரு வினையை ஆளுந்தன்மை, பெருமை எய்துதல் இல்லை. இது பொருள் செய்ய மாட்டானென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற மறுமைப்பயன் இல்லாதானுக்கு; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - வினையை ஆளுந்தன்மை உண்டாய வழியும் நல்லோரால் கொண்டாடப்படாது. ('உண்டாய வழியும்' என்பது அவாய் நிலையான் வந்தது. இல்லறம் செய்தற்குரிய நன்மை இன்மையின், 'மறுமையிலாளன்' என்றும், வினையையாளும் தன்மை தன் தன்மையில்லாத அவனால் முடிவு போகாமையின், 'வீறு எய்தல் இன்று' என்றும் கூறினார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனைவிக்கு அஞ்சி நடக்கும் மறுமைப்பயன் இல்லாதவனது; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று-வினைமுயற்சி வெற்றிபெறுவதில்லை. இல்லறஞ்செய்தற் குரிய உரிமையின்மையின் 'மறுமையிலாளன்' என்றும், ஆண்மையின்மையின் 'வீறெய்தலின்று' என்றும், கூறினார்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


குடும்ப தலைவிக்கு அஞ்சும் அடுத்தது அறியும் அறிவில்லாதவன் செயல்திறன் சிறப்பாக இருக்காது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தன் மனையாளுக்கு அஞ்சி வாழும் மறுமைப்பயனை இல்லாத ஒருவனுக்கு, செயலைச் செய்யும் செயலாண்மை இருந்த போதிலும், அது நல்லோரால் மதிக்கப் படாது.

Thirukkural in English - English Couplet:


No glory crowns e'en manly actions wrought
By him who dreads his wife, nor gives the other world a thought.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.

ThiruKural Transliteration:


manaiyaaLai anjum maRumaiyi laaLan
vinaiyaaNmai veeReydha lindru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore