திருக்குறள் - 1020     அதிகாரம்: 
| Adhikaram: naanutaimai

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.

குறள் 1020 - திருவள்ளுவர் - ThiruValluvar

"naanakath thillaar iyakkam marappaavai" Thirukkural 1020 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்தின்கண் நாணமில்லாதார் இயங்குதல், மரப்பாவை கயிற்றினாலே இயங்கி உயிருள்ளதுபோல மயக்குமதனை ஒக்கும். இது நாணமில்லாதார் மக்களல்லரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அகத்து நாண் இல்லார் இயக்கம் - தம் மனத்தின்கண் நாண் இல்லாத மக்கள் உயிருடையார் போன்று இயங்குகின்ற இயக்கம்; மரப்பாவை நாணால் உயிர் மருட்டியற்று - மரத்தாற் செய்த பாவை இயந்திரக் கயிற்றினானாய தன் இயக்கத்தால் உயிருடைத்தாக மயங்கினாற்போலும். (கருவியே கருத்தாவாயிற்று. நாணில்லாத மக்கள் இயக்கம், நாணுடைய பாவை இயக்கம் போல்வதல்லது, உயிரியக்கம் அன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் நாணில்லாரது இழிவு கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அகத்து நாண் இல்லார் இயக்கம் - தம் மனத்தில் நாணில்லாத மாந்தர் நாணுடையார் போன்றே நடமாடும் நடமாட்டம்; மரப்பாவை நாணால் உயிர் மருட்டிய அற்று - மரத்தினாற் செய்த சிறு படிமை, தன்னை யாட்டும் பொறிக்கயிற்றா லேற்பட்ட தன் ஆட்டத்தினால், தான் உயிருள்ளது போல் தோன்றுமாறு பார்ப்பவர் கண்களை மயக்கினாற் போலும். நாணில்லாதவன் செத்தவனை யொத்தவன் என்பது கருத்து. 'உயிர் மருட்டி யற்று' என்பதால் , பாவையின் அழகும் உயிரோவிய வேலைப்பாடும் அக்காலத் தமிழரின் படிமைக் கலைத் தேர்ச்சியும் உணரப்படும்.இம்மூன்று குறளாலும் நாணில்லாரின் இழிவு கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்துள் வெட்கம் இல்லாதவர்களின் நடமாட்டம், மரத்தால் செய்த பொம்மைக்கு உயிர் ஊட்டியிருப்பதாகக் காட்டி மயக்கியது போலாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நாணுடைமையை தன்னுடைமையாக இல்லாமல் செயல்படுவது மரப்பொம்மையை நூல் காட்டி உயிர் உள்ளதைப் போல் ஆட்டுவது அன்றி வேறல்ல.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தன் மனத்திலே நாணமில்லாத மக்களின் இயக்கம், மரப்பாவை யந்திரக் கயிற்றாலாகிய தன் இயக்கத்தால் உயிருள்ளது போல் மயக்குவது போன்றதாகும்.

Thirukkural in English - English Couplet:


'Tis as with strings a wooden puppet apes life's functions, when
Those void of shame within hold intercourse with men.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string.

ThiruKural Transliteration:


naaNakath thillaar iyakkam marappaavai
naaNaal uyirmarutti atru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore