திருக்குறள் - 1016     அதிகாரம்: 
| Adhikaram: naanutaimai

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.

குறள் 1016 - திருவள்ளுவர் - ThiruValluvar

"naanvaeli kollaadhu mannoa viyan gnaalam" Thirukkural 1016 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


உயர்ந்தவர் தமக்கு ஏமமாக நாணினைக் கொள்வதன்றி அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


மேலாயவர் - உயர்ந்தவர்; வேலி நாண் கொள்ளாது - தமக்கு ஏமமாக நாணினைக் கொள்வதன்றி; வியன் ஞாலம் பேணலர் - அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார். (பழி பாவங்கள் புகுதாமற் காத்தலின், 'வேலி' என்றார். நாணும் ஞாலமும் தம்முள் மாறாயவழி அந்நாணினைக் கொள்வதல்லது, அவை புகுதும் நெறியாய ஞாலத்தினைக் கொள்ள விரும்பார் என்பதாம். மன்னும் ஓவும் அசைகள், 'நாணாகிய வேலியைப் பெற்றல்லது ஞாலம் பெற விரும்பார்' என்று உரைப்பாரும் உளர்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


மேலாயவர்- உயர்ந்தோர்; வேலி நாண் கொள்ளாது- தமக்குப் பாதுகாப்பாகிய நாணினைக் கொள்வதன்றி; வியன்ஞாலம் பேணலர்- பரந்த ஞாலத்தைக் கைப்பற்ற விரும்பார். நாணும் ஞாலமுமாகிய இரண்டிலொன்றைத் தெரிந்துகொள்ள வேண்டிய நிலைமை நேர்ந்த விடத்து, ஞாலத்தையே தெரிந்துகொள்வர் என்பதாம். பழி பளகு, நேராமற் காத்தலின் நாணை 'வேலி' என்றார்.மன்னும் ஓவும் அசை. என்றார் பரிமேலழகர்.முற்காலத்தில் ' மன்னோ' என்பது ஆடூஉ முன்னிலையாயிருந்தமை முன்னரே 990-ஆம் குறளுரையிற் கூறப்பட்டது.நாணாகிய வேலியைப் பெற்றல்லது ஞாலம் பெற விரும்பார் என்னும் உரை, முரண்பாடு கொள்ளுதலின் பொருந்தாது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக நாணத்தைக் கொள்வாரே அல்லாமல், இந்தப் பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பரந்த இந்த உலகில் பாதுகாப்பையும்விட, நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக் கொள்வார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நாணுடைமை என்ற தற்காப்பு வேலியை அமைத்துக் கொள்ளாமல் மேன்மை அடைய முடியுமா?. விரிந்த உலகில் மேலானவர்களைப் பின்பற்றுவதால்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


உயர்ந்தோர், தமக்கு வேலியாக நாணத்தைக் கொள்வார்களே அல்லாமல், அகன்ற இவ்வுலகத்தைத் தமக்கு வேலியாகக் கொள்வதை விரும்ப மாட்டார்கள்

Thirukkural in English - English Couplet:


Unless the hedge of shame inviolate remain,
For men of lofty soul the earth's vast realms no charms retain.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The great make modesty their barrier (of defence) and not the wide world.

ThiruKural Transliteration:


naaNvaeli koLLaadhu mannoa viyan-gnaalam
paeNalar maelaa yavar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore