திருக்குறள் - 1215     அதிகாரம்: 

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

குறள் 1215 - திருவள்ளுவர் - ThiruValluvar

"nanavinaal kandadhooum aange kanavundhaan" Thirukkural 1215 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்பொழுதைக்கு இன்பமாம்; அதுபோலக் கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் கண்ட அப்பொழுதைக்கு இன்பமாம். இது கனவிற் புணர்ச்சி இன்பம் தருமோவென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) நனவினான் கண்டதூஉம் (இனிது) ஆங்கே - முன் நனவின்கண் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பந்தானும் இனிதாயிற்று, அப்பொழுதே; கனவும் தான் கண்டபொழுதே இனிது - இன்று கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அக் கண்டபொழுதே இனிதாயிற்று. அதனான் எனக்கு இரண்டும் ஒத்தன. (இனிது' என்பது முன்னும் கூட்டப்பட்டது. கனவு -ஆகுபெயர். முன்னும் யான் பெற்றது இவ்வளவே, இன்னும் அது கொண்டு ஆற்றுவல்' என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


நனவினாற் கண்டதும் ஆங்கே (இனிது) - முன்பு நனவின்கண் காதலரைக் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்பொழுதே இனிதாயிருந்தது; கனவும் தான் கண்டபொழுதே இனிது - இன்று கனவின்கண் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பமும் அக்கண்ட பொழுதே இனிதாயிருந்தது. ஆதலால் இரண்டும் எனக்கு ஒத்தனவே. முன்னும் யான் பெற்ற இன்பம் இவ்வளவே. அதை இன்னும் இங்ஙனமே பெற்று ஆற்றுவேன் என்பதாம். 'கண்டதூஉம்' இன்னிசையளபெடை. ஏகாரங்கள் பிரிநிலை. 'கனவு' ஆகுபொருளி. 'இனிது' முன்னுங் கூட்டப்பட்டது. மூன்றாம் வேற்றுமை ஆனுருபு ஏழாம் வேற்றுமைப் பொருளில் மயங்கிற்று.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நேரில் கண்டு இருந்தது எப்படியோ கனவில் கண்ட பொழுதும் இருந்தது அதே இனிமை.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


முன்பு நனவில் கண்ட இன்பமும் அந்தப் பொழுதளவிலே இனிதாயிருந்தது; இப்பொழுது காணும் கனவும், காணும் அந்தப் பொழுதிலே நமக்கு இனிதாகவே யுள்ளது.

Thirukkural in English - English Couplet:


As what I then beheld in waking hour was sweet,
So pleasant dreams in hour of sleep my spirit greet.

ThirukKural English Meaning - Couplet -Translation:


I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant.

ThiruKural Transliteration:


nanavinaal kandadhooum aange kanavundhaan
kanda pozhudhae inidhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore