திருக்குறள் - 1138     அதிகாரம்: 

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.

குறள் 1138 - திருவள்ளுவர் - ThiruValluvar

"niraiyariyar man aliyar ennaadhu kaamam" Thirukkural 1138 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே!.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நிறையிலர், மிக அளிக்கத்தக்கா ரென்னாது என் காமமானது மறைத்தலைக் கடத்தலுமன்றி மன்றின்கண் படரா நின்றது. இஃது அம்பலும் அலரும் ஆகாவென்று தோழி பகற்குறி மறுத்தது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(காப்புச் சிறைமிக்குக் காமம் பெருகியவழிச் சொல்லியது.) நிறை அரியர் - இவர் நிறையால் நாம் மீதூர்தற்கு அரியர் என்று அஞ்சுதல் செய்யாது; மன் அளியர் என்னாது - மிகவும் அளிக்கத்தக்கார் என்று இரங்குதல் செய்யாது; காமம் மறை இறந்து மன்றுபடும் - மகளிர் காமமும் அவர் மறைத்தலைக் கடந்து மன்றின் கண்ணே வெளிப்படுவதாயிருந்தது. ('என்னாது' என்பது முன்னும் கூட்டி மகளிர் என்பது வருவிக்கப்பட்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'மன்று'என்பது தந்தை தன்னையரை நோக்கி. உலகத்துப் பெண் பாலார் காமத்து இயல்பு கூறுவாள் போன்று தன் காமம் பெருகியவாறும், இனிஅறத்தோடு நிற்றல் வேண்டும் என்பதும் குறிப்பால் கூறியவாறாயிற்று ).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(காப்புச் சிறைமிக்குக் காமம் பெருகிய வழித் தலைமகள் சொல்லியது. ) நிறை அரியர் ( என்னாது ) - இவர் நிறை யென்னும் அடக்கப் பண்புடைமையால் இவரை நாம் மேற்கொள்வது அரிது என்று அஞ்சுதல் செய்யாது ; மன் அளியர் என்னாது - மிகவும் .அளிக்கத்தக்கார் என்று இரங்குதலுஞ் செய்யாது ; காமம் மறை இறந்து மன்று படும் - மகளிர் காமமும் அவர் மறைத்தலைக் கடந்து அம்பலத்திற்கு வருவதாயிற்று . உலகத்துப் பெண்பாலார் காமத்தியல்பு கூறுவாள் போன்று , தன் காமம் பெருகியவாறும் இனி அறத்தொடு நிற்றல் வேண்டு மென்பதும் குறிப்பாற் கூறியவாறு . ' என்னாது ' என்பது முன்னும் கூட்டி மகளிர் என்பது வருவித்துரைக்கப்பட்டது . இது அம் பலின் பிற்பட்ட போதுநிலை , காப்புச்சிறையாவது , தலைமகள்மீது ஐயுற்ற செவிலியும் நற்றாயும் அவளை வீட்டைவிட்டு வெளியேறாவாறு . காவல் செய்தல் .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நிறைவை அறியாதவர் மதிக்கத் தாகாதவர் என அறியாது காமம் மறைக்க முடியாமல் வெளிப்படும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


‘நிறை இல்லாதவர் இவர்’ என்றும், ‘இரங்கத்தவர் இவர்’ என்றும் பாராது, காமநோயானது, மறைப்பைக் கடந்து, மன்றத்தில் தானாக வெளிப்படுகின்றதே!

Thirukkural in English - English Couplet:


In virtue hard to move, yet very tender, too, are we;
Love deems not so, would rend the veil, and court publicity!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it).

ThiruKural Transliteration:


niRaiyariyar man-aLiyar ennaadhu kaamam
maRaiyiRandhu mandru padum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore