திருக்குறள் - 1132     அதிகாரம்: 

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.

குறள் 1132 - திருவள்ளுவர் - ThiruValluvar

"noanaa udampum uyirum madalerum" Thirukkural 1132 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும்: நாணினை நீக்கி நின்று. இஃது உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


('நாணுடைய நுமக்கு அது முடியாது', என மடல் விலக்கல் உற்றாட்குச் சொல்லியது) நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - அவ் வருத்தத்தினைப் பொறாத உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன; நாணினை நீக்கி நிறுத்து - அதனை விலக்குவதாய நாணினை அகற்றி. ('வருந்தினார்க்கு' என மேல் வந்தமையின், செயப்படு பொருள் ஈண்டுக் கூறார் ஆயினார். மடல் - ஆகுபெயர். 'நீக்கி நிறுத்து' என்பது ஒரு சொல் நீர்மைத்து. அதுவும் இது பொழுது நீங்கிற்று என்பான், 'உடம்பும் உயிரும்' என்றான், அவைதாம் தம்முள் நீங்காமற்பொருட்டு. 'மடலேறும்' என்றது, அவள் தன் ஆற்றாமையறிந்து கடிதிற்குறை நேர்தல் நோக்கி.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


( நாணுடைய நுமக்கு அது முடியாதென மடல்விலக்கிய தோழிக்குத் தலைமகன் சொல்லியது . ) நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - அத்துன்பத்தைப் பொறாத வுடம்பும் உயிரும் தமக்குக் காப்பான மடற்குதிரையை ஏறக் கருதுகின்றன ; நாணினை நீக்கி நிறுத்து - அதற்குத் தடையான நாணத்தை நீக்கி வைத்து . அறிவு நிறை யோர்ப்புக் கடைப்பிடி யென்னும் ஆண்மைக்குணம் நான்கும் முன்னரே நீங்கிவிட்டன் . எஞ்சியிருக்கும் நாணம் என்னும் இருபாற் பொதுக் குணமும் , ' மடலேற்றத்தின் பொருட்டு நீக்கப்பட்டுவிடும் . அல்லாக்கால் உயிரும் உடம்பும் துன்பம் பொறுத்துக்கொண்டு உடனிற்கு மாறில்லை யென்பான் , 'நோனாவுடம்பு முயிரும் மடலேறும் ' என்றான் . ' உழந்து வருந்தினார்க்கு ' என மேற்குறிளில் வந்தமையின் , இங்கு ' நோனா ' என்று மட்டுங் கூறினார் . ' மடலேறும் ' என்றது தோழி தன் ஆற்றாமை யறிந்து விரைந்து குறைமுடிப்பாள் என்று கருதி . ' மடல் ' ஆகுபெயர் .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தாங்கமுடியா காமத்தால் உடம்பும் உயிரும் அச்சப்பட வேண்டிய மடலேறும் எனவே நாணத்தை விலக்கி வை.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


காதலியின் அன்பைப் பெறாத துயரத்தைத் தாங்கமுடியாத என் உடம்பும் உயிரும், நாணத்தை என்னிடமிருந்து நீக்கி நிறுத்திவிட்டு, மடலூரத் துணிந்துவிட்டன.

Thirukkural in English - English Couplet:


My body and my soul, that can no more endure,
Will lay reserve aside, and mount the 'horse of palm'.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse.

ThiruKural Transliteration:


noanaa udampum uyirum madaleRum
naaNinai neekki niRuththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore