திருக்குறள் - 971     அதிகாரம்: 
| Adhikaram: perumai

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.

குறள் 971 - திருவள்ளுவர் - ThiruValluvar

"oli oruvarku ulla verukkai ili oruvarku" Thirukkural 971 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவனுக்கு மனப்பெருமை புகழாம்: அதனை நீங்கி வாழுமென்று பிறர் சொல்லுதல் ஒருவனுக்கு இளிவாமாதலான். இது பெருமையாவது நிறையுடைமை யென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை - ஒருவனுக்கு ஒளியாவது பிறராற் செயற்கரிய செய்வேம் என்று கருதும் ஊக்கமிகுதி; ஒருவற்கு இளி அஃது இறந்து வாழ்தும் எனல் - ஒருவனுக்கு மாசாவது அச்செயலை யொழிந்து உயிர் வாழக்கடவேம் என்று கருதுதல். (ஒளி - தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை. 'ஒளிநிறான் ஓங்குபுகழ் செய்யான்' (நாலடி.செல்வம் நிலையாமை. 9) என்றார் பிறரும், மேலும் 'செயற்கரிய செய்வார் பெரியர்'(குறள்.26)என்றாராயினும் ஈண்டு அவை அளவறிந்த ஒப்புரவு ஈகை முதலியவாம். அவற்றினானாய பெருமையை அதன் காரணத்தின் மேலிட்டு 'உள்ளவெறுக்கை' என்றும், அது தன்னையே அதன் காரியமாகிய ஒளிஆக்கியும் கூறினார். இவ்வாறு அதன் எதிர்மறைக்கண்ணும் ஒக்கும். இதனால் பெருமையின் சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை - ஒருவனைச் சிறப்பித்து அவன் பெயரை விளங்கச் செய்யும் பெருமை, பிறராற் செயற்கரிய செய்வேம் என்னும் ஊக்க மிகுதியால் ஏற்படுவதே; ஒருவற்கு இளி அஃது இறந்து வாழ்தும் எனல் - ஒருவனுக்கு இழிவாவது, அவ்வருஞ்செயலும் அதற்கேதுவான ஊக்கமுமின்றி எளிதாய் வாழக்கடவோம் என்றெண்ணுவதே. ஒருவன் பெயரை விளங்கச் செய்வதால் அவன் பெருமையை 'ஒளி' என்றும், அப்பெருமைக்குக் காரணமாகிய அருஞ்செயற்கு ஏதுவான ஊக்கமிகுதியை அதன் மும்மடிக் கருமியமாகிய ஒளியொடு சார்த்தியும் கூறினார். ஒளி,இளி என்பன இங்கு ஒன்றிற்கொன்று எதிராகவந்த சொற்கள் "செயற்கரிய" என்று முற்கூறியது (குறள். 26) துறவு பற்றிய தென்றும், இங்குக் கொள்வது புரவு பற்றிய தென்றும்,வேறுபாடறிக. வெறுக்கை- செல்வம். அது இங்கு மிகுதியைக் குறித்தது. வெறுத்தல் செறிதல், புரவு பற்றிய அருவினைகள் ஈகையும் ஒப்பரவும், 'வாழ்தல்' என்னும் பன்மை நெஞ்சோடு கிளத்தல்பற்றிய எண் வழுவமைதி, இக்குறளாற் பெருமைக்கு ஏது கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவருக்கு ஒளியாகும் சுய வெளிச்சம் என்பது உள்ளத்தை வெறுமையாக வைத்துக்கொள்வது. ஒருவருக்கு இழிவானது வெறுமை இழந்து உள்ளத்து குமுறலுடன் வாழ்வது எனலாம்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


ஒருவனுக்குப் பெருமை, ‘பிறரால் செய்வதற்கரியதைச் செய்வேன்’ என்னும் மனவூக்கமே; இழிவாவது, ‘அதனைச் செய்யாமலே உயிர் வாழ்வேன்’ என்று நினைப்பதாகும்.

Thirukkural in English - English Couplet:


he light of life is mental energy; disgrace is his
Who says, 'I 'ill lead a happy life devoid of this.'

ThirukKural English Meaning - Couplet -Translation:


One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind).

ThiruKural Transliteration:


oLi-oruvaRku uLLa veRukkai iLi-oruvaRku
aqdhiRandhu vaazhdhum enal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore