திருக்குறள் - 1013     அதிகாரம்: 
| Adhikaram: naanutaimai

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.

குறள் 1013 - திருவள்ளுவர் - ThiruValluvar

"oonaik kuriththa uyirellaam naanennum" Thirukkural 1013 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பலவகை உயிரும் மேற்கூறிய எல்லாவற்றினும் உண்டியைக் கருதிற்று: அதுபோலச் சால்பு, நாணமாகிய நன்மையைக் கருதிற்று. இது சான்றோர்க்கு நற்குணங்கள் பலவும் வேண்டுமாயினும், இஃது இன்றியமையாதென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


உயிர் எல்லாம் ஊனைக் குறித்த - எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடா: சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது - அது போலச் சால்பு என்னும் நன்மைக் குணத்தைத் தனக்கு நிலைகளனாகக் கொண்டு, அதனை விடாது. ('உடம்பு' என்பது சாதியொருமை. நன்மை - ஆகுபெயர். உயிர் உடம்போடு கூடியல்லது பயனெய்தாதவாறு போலச் சால்பு நாணோடு கூடியல்லது பயன் எய்தாது என்பதாம். 'ஊணைக் குறித்த' என்று பாடம் ஓதுவாரும் உளர்.

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


உயிர் எல்லாம் ஊனைக் குறித்த - எல்லா வுயிர்களும் உடம்பைத் தமக்கு நிலைக்களமாகக் கொண்டு அதனைப்பற்றும்; சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது- அதுபோலச் சான்றாண்மை நாண் என்னும் நற்குணத்தைத் தனக்கு நிலைக்களமாகக் கொண்டு அதனைப் பற்றும். உயிர் உடம்பொடு கூடியல்லது வாழாதது போல, சால்பு நாணோடு கூடியல்லது நடவாது என்பதாம். 'ஊன்' ஆகுபெயர். ' உடம்பு' வகுப்பொருமை. 'நன்மை' ஆகுபொருளது. 'ஊனை' என்று பாடங் கொள்வர் மணக்குடவ காலிங்க பரிப்பெருமாளர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


எல்லா உயிர்களும் உடம்பை இடமாகக் கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக் கொண்டுள்ளது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


உடல் பெற்ற உயிர்களின் நாணுடைமை என்ற நன்மை தரும் பண்பை பொருத்தே மேன்மை இருக்கும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


உயிர்கள் எல்லாம் தம் இருப்பிடமான உடம்பை ஒரு போதும் விடமாட்டா; அவ்வாறே ‘நாணம்’ என்னும் குணத்தையும் ‘சால்பு’ ஒரு போதும் விட்டுவிடாது.

Thirukkural in English - English Couplet:


All spirits homes of flesh as habitation claim,
And perfect virtue ever dwells with shame.

ThirukKural English Meaning - Couplet -Translation:


As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection.

ThiruKural Transliteration:


oonaik kuRiththa uyirellaam naaNennum
nanmai kuRiththadhu saalpu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore