திருக்குறள் - 1121     அதிகாரம்: 

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.

குறள் 1121 - திருவள்ளுவர் - ThiruValluvar

"paalodu thaenkalanh thatrae panimozhi" Thirukkural 1121 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பாலொடுகூடத் தேனைக்கலந்தாற் போலும்: மிகவும் இனிமைதரும் புகழினையுடையாளது வெள்ளிய எயிற்றினின்று ஊறிய நீர். இது புணர்ச்சியுண்மையும் காதல் மிகுதியும் தோன்றத் தலைமகன் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது , தலைமகன் தன் காதல் மிகுதி கூறலும் , தலைமகள் தன் காதல் மிகுதி கூறலும் ஆம் . இது , புணர்ச்சியும் நலனும் பற்றி நிகழ்வதாகலின் , புணர்ச்சி மகிழ்தல் , நலம் புனைந்து உரைத்தல்களின் பின் வைக்கப்பட்டது.] (இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் தலைமகன் தன் நயப்பு உணர்த்தியது.) பணிமொழி வால் எயிறு ஊறிய நீர் - இம்மெல்லிய மொழியினை யுடையாளது வாலிய எயிறூறிய நீர்; பாலொடு தேன் கலந்தற்று - பாலுடனே தேனைக் கலந்த கலவை போலும். ('கலந்தற்று' என்பது விகாரமாயிற்று; கலக்கப்பட்டது என்றவாறு. 'பாலொடு தேன்' என்ற அதனால் அதன் சுவை போலுஞ் சுவையினை உடைத்து என்பதாயிற்று. 'எயிறூறிய' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. வேறு வேறறியப்பட்ட சுவையவாய பாலும் தேனும் கலந்துழி அக்கலவை இன்னது என்று அறியலாகாத இன்சுவைத்தாம் ஆகலின், அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


( இயற்கைப் புணர்ச்சி யிறுதிக்கண் தலைமகன் சொல்லியது . ) பணிமொழி வால் எயிறு ஊறிய நீர் - இம்மென் மொழியாளின் வெண்பல்லில் ஊறிய நீர் ; பாலொடு தேன் கலந்தது அற்று - பாலுந் தேனுங்கலந்த கலவை போலும் . பருகக் கூடிய பாலின் குறைந்த இனிமையும் , பருகக்கூடாத தேனின் நிறைந்த இனிமையும் கலந்தாற் பருகக் கூடிய சிறந்த இனிமை பெறப்படுதலின் அதை ' வாலெயிற்று நீர்க்கு ' உவமமாக்கினான். கலந்ததற்று என்பது கலந்தற்று எனத்தொக்கது . ஏகாரம் தேற்றம் , ' பணிமொழி ' அன்மொழித்தொகை . ' எயிறூறிய ' இடவேற்றுமைத் தொகை

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்!.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இனியமொழி பேசுகினற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பால் உடன் தேன் கலந்ததைப் போன்றது பண்புடன் பேசும் பற்களில் ஊறிய நிர்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


பணிவோடு பேசுகின்ற இவளது, வெண்மையான பற்களிடையே ஊறிவந்த நீரானது, பாலோடு தேனும் கலந்தாற் போல மிகுந்த சுவையினை உடையதாகும்!.

Thirukkural in English - English Couplet:


The dew on her white teeth, whose voice is soft and low,
Is as when milk and honey mingled flow.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey.

ThiruKural Transliteration:


paalodu thaenkalanh thatrae paNimozhi
vaaleyiRu ooRiya neer.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore