திருக்குறள் - 816     அதிகாரம்: 
| Adhikaram: thee natpu

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.

குறள் 816 - திருவள்ளுவர் - ThiruValluvar

"paedhai perungezheei natpin arivutaiyaar" Thirukkural 816 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவில்லாதார் மிகவும் கெழுமிய நட்பாகுமதனினும், அறிவுடையார் பகைமை கோடிமடங்கு மிக்க நன்மையை உண்டாக்கும். இது பேதைமையார் நட்புத் தீமை பயக்கு மென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பேதை பெருங்கெழீஇ நட்பின் - அறிவிலானது மிகச் சிறந்த நட்பின்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் - அறிவுடையானது பகைமை கோடி மடங்கு நன்று. ( 'கெழீஇய' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. பன்மை உயர்த்தற்கண் வந்தது. அறிவுடையான் பகைமை ஒருதீங்கும் பயவாமையாயினும், பேதை நட்பு எல்லாத் தீங்கும் பயத்தலானும், 'கோடி உறும்' என்றார். 'பெருங்கழி நட்பு'என்று பாடம் ஓதுவாரும் உளர்.) .

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பேதை பெருங் கெழீஇ நட்பின் - அறிவிலானது மிக நெருங்கிய நட்பினும்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் - அறிவுடையானின் பகைமை கோடி மடங்கு நல்லதாம். பேதை நட்பு பல்வகைத் தீங்கை விளைத்தலானும், அறிவுடையான் பகை ஒரு தீங்கும் விளைவிக்காமையானும், ' கோடியுறும் ' என்றார். பன்மை உயர்வு பற்றி வந்தது. ஏதின்மை' இங்கு ஏதும் அன்பின்மை. கெழி நட்பு. "ஒருவன் கெழியின்மை கேட்டாலறிக" என்பது நான்மணிக் கடிகை (93). கெழீஇ என்பது கெழி என்பதன் அளபெடை வடிவம். பகைவனைக் கெழீஇயிலி என்பது இலக்கிய வழக்கு (தொல். சொல். 57, இளம். உரை). பெருங்கெழீஇ நட்பு என்பது பேருழுவலன்பு என்பது போன்ற பல்சொற்றொடர். "பெருங்கழிநட்பென்று பாடமோதுவாருமுளர்." என்றார் பரிமேலழகர். அது பெருங்கெழி நட்பு என்றுமிருந்திருக்கலாம். "கெழீஇய வென்பத னிறுதிநிலை விகாரத்தாற் றொக்கது." என்று கொள்ளத் தேவையில்லை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மையாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சிந்தை தெளிவில்லாதவரிடம் நெருக்கமான நட்புக் கொள்வதை விட ஆய்ந்து அறிபவரிடம் பகைமை பாராட்டுவது நிறைந்த நன்மை தரும்.

Thirukkural in English - English Couplet:


Better ten million times incur the wise man's hate,
Than form with foolish men a friendship intimate.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool.

ThiruKural Transliteration:


paedhai perungezheei natpin aRivutaiyaar
Edhinmai koati uRum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore