திருக்குறள் - 1018     அதிகாரம்: 
| Adhikaram: naanutaimai

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.

குறள் 1018 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pirarnhaanath thakkadhu thaannhaanaa naayin" Thirukkural 1018 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


உயர்ந்தார் பலரும் நாணத்தகுவ தொன்றினைத் தான் நாணாது செய்வனாயின் அவனை அறம் நாணியடையா தொழியும் தகுதியுடைத்தாம். இது நாணமில்லாதாரை அறம் சாரா தென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின் - கேட்டாரும் கண்டாரும் நாணத்தக்க பழியை ஒருவன் தான் நாணாது செய்யுமாயின்; அறம் நாணத்தக்கது உடைத்து - அந்நாணாமை அவனை அறம்விட்டு நீங்கத் தக்க குற்றத்தினையுடைத்து. ('தான்' எனச் செய்வானைப் பிரிக்கின்றார் ஆகலின், 'பிறர்' என்றார். நாணோடு இயைபு இல்லாதானை அறம் சாராது என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர் நாணத் தக்கது தான் நாணானாயின்- கண்டாருங் கேட்டாருமாகிய பிறர் நாணத்தக்க பழியை ஒருவன்தான் நாணாது செய்வானாயின்; அறம் நாணத் தக்கது உடைத்து- அந்நாணாமை அறம் நாணி அவனைவிட்டு நீங்கத் தக்க குற்றத்தை யுடையதாம். நாணில்லாதவனை அறஞ்சாராது என்பது ஆட்படையணி. நாணின்றி அறமில்லை யென்பது கருத்து.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறம் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அடுத்தவர் நாணக்கூடிய செயல்களுக்காக தான் நாணாவில்லை என்றால் அறம் நாணி விலகி நிற்கும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


கேட்டவரும் கண்டவரும் நாணமின்றிப் பழிக்கத் தான் நாணாதவன் ஆனால், அந் நாணானது, அவனை விட்டு அறம் நீங்கி போகத் தகுந்த குற்றத்தை உண்டாக்கிவிடும்.

Thirukkural in English - English Couplet:


Though know'st no shame, while all around asha med must be:
Virtue will shrink away ashamed of thee!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of.

ThiruKural Transliteration:


piRarnhaaNath thakkadhu thaannhaaNaa naayin
aRamnhaaNath thakkadhu udaiththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore