திருக்குறள் - 1255     அதிகாரம்: 
| Adhikaram: niraiyazhidhal

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.

குறள் 1255 - திருவள்ளுவர் - ThiruValluvar

"setraarpin sellaap perundhakaimai kaamanoai" Thirukkural 1255 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அனறு.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தம்மை யிகழ்ந்தார்பின் செல்லாத பெரிய தகைமை காம நோயுற்றால் அறிவதொன்று அன்று. இது தம்மை யிகழ்ந்து போனவர்பின்சென்று இரங்குதல் பெரியார்க்குத் தகாது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(நம்மை மறந்தாரை நாமும் மறக்கற்பாலம் என்றாட்குச் சொல்லியது.) செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை - தம்மை அகன்று சென்றார்பின் செல்லாது தாமும் அகன்று நிற்கும் நிறையுடைமை; காமநோய் உற்றார் அறிவது ஒன்று அன்று - காமநோயினை உறாதார் அறிவதொன்று அன்றி உற்றார் அறிவதொன்று அன்று. (இன்பத்தோடு கழியுங் காலத்தைத் துன்பத்தொடு கழியுமாறு செய்தலின் 'செற்றார்' என்றாள். பின் சேறல் - மனத்தால் இடைவிடாது நினைத்தல். பெருந்தகைமை - ஈண்டு ஆகுபெயர். காம நோய் உறாதார் - மானம் உடையார். 'நன்று என உணரார் மாட்டும் சென்றே நிற்கும், யான் அறிவதொன்று அன்று' என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(நம்மை மறந்தாரை நாமும் மறத்தற்குரியோம் என்ற தோழிக்குச் சொல்லியது.) செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை- தம்மைத் துன்புறுத்திப் பிரிந்துசென்றார் பின் செல்லாது தாமும் நீங்கி நிற்கும் நிறையுடைமை; காம நோய் உற்றார் அறிவது ஒன்று அன்று-காமநோய்ப் படாதவர் அறிவதொன்றே யன்றி அந்நோய்ப்பட்டவர் அறிவ தொன்றன்று . காம நோய்ப்பட்டவர் மானமுடை யவரல்லர் . ஆதலால் ' செற்றார் பின் செல்லாப் பெருந்தகைமை ' அவர்க்கில்லை யென்பதாம் . இன்பக் காலத்தைத் துன்பக்காலமாக மாற்றியதால் ' செற்றார் ' என்றாள் . பின் செல்லுதல் இடைவிடாது நினைத்தல் . ' பெருந்தகைமை ' இங்கு ஆகுபொருளி .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னைப் பிரிந்து சென்றவர் பின்னே செல்லாது, தானும் அவரை விட்டுப் பிரிந்து நிற்கும் மன அடக்கத்தைக் காதல் நோயை அறியாதவர் பெற முடியும். அறிந்தவரால் பெற முடியாது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


விரும்பாது சென்றவர் பின் செல்லாமல் இருக்கும் பெருந்தகைமை காமநோய் அடைந்தவர் அறியக்கூடிய ஒன்று இல்லை.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தம்மை வெறுத்தவர் பின்னே அவர் அன்பை வேண்டிச் செல்லாத பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் ஒரு தன்மையே அன்று.

Thirukkural in English - English Couplet:


The dignity that seeks not him who acts as foe,
Is the one thing that loving heart can never know.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love.

ThiruKural Transliteration:


setraarpin sellaap perundhakaimai kaamanoai
utraar aRivadhondru andru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore