திருக்குறள் - 614     அதிகாரம்: 
| Adhikaram: aalvinaiyutaimai

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.

குறள் 614 - திருவள்ளுவர் - ThiruValluvar

"thaalaanmai illaadhaan vaelaanmai paetikai" Thirukkural 614 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


முயற்சியில்லாதான் பிறர்க்கு உபகரித்தல், படைகண்டாலஞ்சுமவன் கைவாள் பிடித்தாற்போலக் கெடும். இஃது அறம் செய்யமாட்டானென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தாளாண்மை இல்லாதான் வேளாண்மை - முயற்சி இல்லாதவன் உபகாரியாம் தன்மை; பேடி கை வாள் ஆண்மை போலக் கெடும் - படை கண்டால் அஞ்சும் பேடி அதனிடைத் தன் கையில் வாளை ஆளுதல் தன்மை போல இல்லையாம்.('ஆள்' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர், பேடி வாளைப் பணிகோடற் கருத்து உடையளாயினும், அது தன் அச்சத்தால் முடியாதவாறு போல, முயற்சியில்லாதவன் பலர்க்கும் உபகரித்தற் கருத்துடையனாயினும், அது தன் வறுமையான் முடியாதுஎன்பதாம். 'வாளாண்மை' என்பதற்கு வாளாற் செய்யும்ஆண்மை என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது இல்லாதானது குற்றம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தாளாண்மை இல்லாதான் வேளாண்மை - விடாமுயற்சியில்லாதவன் எல்லார்க்கும் நன்றிசெய்தலை மேற்கொள்ளுதல் ; பேடிகை வாள் ஆண்மை போலக் கெடும் - போருக்கு அஞ்சும்பேடி போர்க்களத்தில் தன் கையிலுள்ளவாளைப் பயன்படுத்துதல் போல் இல்செயலாம். பேடிக்கு வாளாண்மை இல்லாததுபோல ,விடா முயற்சியில்லானுக்குத் தாளாண்மை யில்லை யென்பதாம். ஆண்மை - ஆளுந்தன்மை. ஆளுதல் - பயன்படுத்துதல் . 'வாளாண்மை' யென்பதற்கு வாளாற் செய்யும் ஆண்மையென்று சிலர் உரைத்திருப்பதாகத் தெரிகின்றது. அது வேறு ஆண்மை யுண்மையைக் குறிப்பதால் ,அது உரையன்மை அறிக. பெள் -பெண் -பெண் -பேடு -பேடன் , பேடி. ஆண்டன்மையை விரும்பும் பெண் பேடன்; பெண்டன்மையை விரும்பும் ஆண்பேடி . இப்பாகுபாடு பாலுறவு பற்றியதேயன்றிப் போர்மறம் பற்றிய தன்று .பேடியருள் போர்மறம் உள்ளவரும் உளர்; இல்லாதவரும் உளர். இங்குக் குறிக்கப்பட்ட பேடி அஃதில்லாத வகையென அறிக. பேடிக்கு வாளைப்போரிலாள விருப்ப மிருப்பினும் அச்சத்தாற் கூடாமை போல, விடாமுயற்சி யில்லானுக்கு வேளாண்மைமேல் விருப்பமிருப்பினும் வறுமையாற் கூடா தென்பதை யுணர்த்தற்கு ,இல்லை யென்னாது 'கெடும்' என்றார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


முயற்சி இல்லாதவன் உபகாரியாக இருக்கும் தன்மையென்பது, படையினைக் கண்டால் அஞ்சுகின்ற பேடி தனது கையில் வாளினை வைத்திருக்கும் தன்மை போல இல்லையாக முடியும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


முயற்சி இல்லாதவன் உபகாரியாக இருக்கும் தன்மையென்பது, படையினைக் கண்டால் அஞ்சுகின்ற பேடி தனது கையில் வாளினை வைத்திருக்கும் தன்மை போல இல்லையாக முடியும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஊக்கம் இல்லாதவர் உதவுதல், வீரம் இல்லாதவர் கையில் இருக்கும் கத்தி போல் பயனற்றுப் போகும்.

Thirukkural in English - English Couplet:


Beneficent intent in men by whom no strenuous work is wrought,
Like battle-axe in sexless being's hand availeth nought.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand.

ThiruKural Transliteration:


thaaLaaNmai illaadhaan vaeLaaNmai paetikai
vaaLaaNmai poalak kedum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore