திருக்குறள் - 111     அதிகாரம்: 
| Adhikaram: natuvu nilaimai

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

குறள் 111 - திருவள்ளுவர் - ThiruValluvar

"thakudhi enavondru nandrae paku" Thirukkural 111 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நடுவு நிலைமை யென்று சொல்லப்படுகின்ற தொன்று நல்லதே: அவரவர்நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது, பகை ,நொதுமல்,நட்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்பநிற்கும் நிலைமை .இது நன்றி செய்தார்மாட்டு அந்நன்றியினை நினைத்தவழிச் சிதையுமன்றே? அவ்விடத்துஞ் சிதையலாகாது என்றற்குச் செய்ந்நன்றி அறிதலின்கண் வைக்கப்பட்டது.) தகுதி என ஒன்றே நன்று - நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று; பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின் - பகை, நொதுமல் நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின். (தகுதி உடையதனைத் 'தகுதி' என்றார்."ஊரானோர் தேவகுலம்" என்பது போலப் பகுதியான் என்புழி ஆன் உருபு'தோறு'ம் தன் பொருட்டாய் நின்றது. 'பெறின்' என்பது அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது. இதனான் நடுவுநிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின்-பகை நட்பு நொதுமல் என்னும் முத்திறத்தும் முறைமை தவறாது ஒழுகப் பெறின்; தகுதி என ஒன்றே நன்று-நேர்மை என்று சொல்லப்படும் ஒர் அறமே நல்லதாம். தகுதி என்ற சொல்லால் இங்குக் குறிக்கப்பட்டது நடுவுநிலை. தமிழரின் ஏமாளித்தனத்தினால் 'யோக்கியதை' என்னும் வடசொல் வழக்கூன்றவே தகுதி என்னும் தகுந்த தமிழ்ச்சொல் வழக்கு வீழ்ந்தது. ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. 'பகுதியான்' என்பது பகுதிதொறும் என்று பொருள் படுதலால், ஆனுருபு உடனிகழ்ச்சிப் பொருளது. 'பெறின்' என்பது அவ்வொழுக்கத்தின் அருமை தோன்ற நின்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


அயலார், பகைவர், நண்பர் என்ற யாவரிடத்திலும் நடுவுநிலைமை என்ற முறைமை விடாமல் நடந்துகொண்டால், நாடு நிலைமை எனப்பட்ட ஓர் அறமே போதுமான நன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பகைவர், அயலார், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தகுதி என்ற ஒன்று நல்லது அது பிரித்துப் பார்க்காமல் எல்லாரிடமும் ஒன்றாக பழுக்கும் தன்மை பெற்றதால்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


ஒவ்வொரு பகுதிதோறும் முறையோடு பொருந்தி நடைபெறுமானால், ‘தகுதி’ என்று கூறப்படும் நடுவுநிலைமையும் நல்லதே ஆகும்.

Thirukkural in English - English Couplet:


If justice, failing not, its quality maintain,
Giving to each his due, -'tis man's one highest gain.

ThirukKural English Meaning - Couplet -Translation:


That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue.

ThiruKural Transliteration:


thakudhi enavondru nandrae pakudhiyaal
paaRpattu ozhukap peRin.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore