திருக்குறள் - 1205     அதிகாரம்: 
| Adhikaram: ninaindhavarpulampal

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.

குறள் 1205 - திருவள்ளுவர் - ThiruValluvar

"thamnenjaththu emmaik katikondaar naanaarkol" Thirukkural 1205 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தமது நெஞ்சின்கண் எம்மை யாம் சொல்லாமல் காவல்கொண்டார் எமது நெஞ்சின்கண் ஒழியாதே வருதலைக் காணாரோ. இது நினையாரோ நினைப்பாரோ என்று ஐயப்பட்ட தலைமகள் நினையாரென்று தெளிந்து கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் - தம்முடைய நெஞ்சின்கண்ணே யாம் செல்லாமல் எம்மைக் காவல் கொண்ட காதலர்; எம் நெஞ்சத்து ஓவா வரல் நாணார்கொல் - தாம் எம்முடைய நெஞ்சின்கண் ஒழியாது வருதலை நாணார்கொல்லோ? (ஒருவரைத் தம்கண் வருதற்கு ஒருகாலும் உடம்படாது, தாம் அவர்கண் பலகாலுஞ்சேறல் நாணுடையார் செயலன்மையின், 'நாணார்கொல்' என்றாள்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் - தம்முடைய உள்ளத்தின் கண் எம்மைச் செல்லவிடாது அதைக் காவல் செய்துகொண்ட காதலர் ; எம் நெஞ்சத்து ஓவாவரல் நாணார் கொல் - தாம் மட்டும் எம்முடைய உள்ளத்தின்கண் இடைவிடாது வருவதற்கு நாணாரோ? ஒருவரைத் தம்மிடத்திற்கு ஒருபோதும் வரவிடாது தடுத்து விட்டுத் தாம் மட்டும் அவரிடத்திற்கு ஓயாது செல்லுதல், நாணுடையார் செயலன்மையின் 'நாணார்கொல்' என்றாள். 'கடி' காவலுணர்த்தும் உரிச்சொல்; இனி, விலக்குப் பொருளது எனினுமாம். 'கொல்' ஐயம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் நெஞ்சத்தில் இருக்கும் என்னை கடிந்து கொள்பவர் வெட்கப்படுவது இல்லை என் நெஞ்சத்தில் என்றும் நிலைத்திருக்க.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாமல் காவல் செய்து கொண்ட நம் காதலர், நம் உள்ளத்தில் தாம் ஓயாமல் வருவதைப் பற்றி வெட்கப்பட மாட்டாரோ?

Thirukkural in English - English Couplet:


Me from his heart he jealously excludes:
Hath he no shame who ceaseless on my heart intrudes?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.

ThiruKural Transliteration:


thamnenjaththu emmaik katikondaar naanaarkol
emnenjaththu ovaa varal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore