திருக்குறள் - 1157     அதிகாரம்: 
| Adhikaram: pirivaatraamai

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.

குறள் 1157 - திருவள்ளுவர் - ThiruValluvar

"thuraivan thurandhamai thootraakol mun kai" Thirukkural 1157 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


இறைவன் பிரிகின்றமையை எமக்கு அறிவியாவோ? முன் கையின் இறையைக் கடவாநின்ற வளைகள். முன்பே அறிதலான், உடம்பு மெலிந்தது என்றவா றாயிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) துறைவன் துறந்தமை - துறைவன் என்னைப் பிரியலுற்றமையை; முன் கை இறை இறவாநின்ற வளை தூற்றாகொல் - அவன் உணர்த்தாமல் தாமே உணர்ந்து என் முன் கையில் இறையினின்றும் கழலாநின்ற வளைகள் எனக்கு அறிவியாவோ? அவன் உணர்த்த உணர்ந்து வந்து நீ அறிவித்தல் வேண்டுமோ? (முன்னே நிகழ்ந்தமையின் 'துறந்தமை' என்றும், கேட்ட துணையான் மெலிந்து ஆற்றாமையின், 'இறவாநின்ற' என்றும் கூறினாள். 'அழுங்குவித்து வந்து கூறற்பாலை யல்¬யாய நீயும், இவ்வளைகள் செய்தனவே செய்தாய்' எனப் புலந்து கூறியவாறு.)

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


துறைவன் துறந்தமை-தலைவன் என்னைவிட்டுப் பிரிந்தமையை; முன்கை இறை இறவா நின்றவளை தூற்றாகொல்-அவனுணர்த்தாமல் தாமே யுணர்ந்து என் முன்கையின் வளைவினின்று கழன்று நின்ற வளையல்களே எனக்கு அறிவிக்க வேண்டுமோ? பிரிந்து செல்ல முன்னமே தீர்மானித்து விட்டமையால் 'துறந்தமை' யென்றும், குறிப்பாலறிந்து வாடிய வாட்டத்தால் வளைகழன்றமையால் 'இறவா நின்ற வளை' யென்றும். பலரறிய வெளிப்படையாய் நிகழ்ந்தமையால் 'தூற்றாகொல்' என்றுங் கூறினாள். செலவழுங்குவித்து எனக்குத் துணையாயிராது. செலவு நிகழ்ந்ததைக் கூறித் துன்பஞ் செய்தாய் என்று புலந்து கூறியவாறு 'வளை' பால்பகா அஃறிணைப்பெயர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இன்பதுன்ப போக்குவரத்திற்கு காரணமான துறைவன் என்னை விட்டு விலகியதை நான் தூற்றாமல் இருந்தாலும் இடம் விட்டு நகராத முன்கை வளை இருக்காது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நம்மைத் தலைவன் பிரிந்து போயினான் என்பதை, மெலிந்த நம் முன்கையிலிருந்து கழலும் வளைகள், ஊரறிய எடுத்துக் காட்டித் தூற்ற மாட்டவோ?

Thirukkural in English - English Couplet:


The bracelet slipping from my wrist announced before
Departure of the Prince that rules the ocean shore.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ?.

ThiruKural Transliteration:


thuRaivan thuRandhamai thootraakol mun-kai
iRai-iravaa nindra valai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore