திருக்குறள் - 921     அதிகாரம்: 
| Adhikaram: kallunnaamai

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.

குறள் 921 - திருவள்ளுவர் - ThiruValluvar

"utkap pataaar oliyizhappar egngnaandrum" Thirukkural 921 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறரால் மதிக்கவும் படார், தோற்றமும் இழப்பர், எல்லா நாளும் கள்ளின்கண் காதல்கொண்டு ஒழுகுவார். இது மதிக்கவும் படார்: புகழும் இலராவரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கள் காதல் கொண்டு ஒழுகுவார் - கள்ளின்மேற் காதல் செய்தொழுகும் அரசர்; எஞ்ஞான்றும் உட்கப்படார் - எஞ்ஞான்றும் பகைவரான் அஞ்சப்படார்; ஒளி இழப்பர் - அதுவே அன்றி முன் எய்திநின்ற ஒளியினையும் இழப்பர். (அறிவின்மையால் பொருள் படை முதலியவற்றாற் பெரியராய காலத்தும் பகைவர் அஞ்சார், தம் முன்னோரான் எய்தி நின்ற ஒளியினையும் இகழற் பாட்டான் இழப்பர் என்பதாம். இவை இரண்டானும் அரசு இனிது செல்லாது என்பது இதனான் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கள் காதல் கொண்டு ஒழுகுவார் - கள்ளின் மேற் பெருவிருப்பங்கொண்டு நடப்பவர்; எஞ்ஞான்றும் உட்கப்படார்-ஒருபோதும் பகைவரால் அஞ்சப்படார்; ஒளிஇழப்பர்- அதுவேயுமன்றித் தாம் பெற்றிருந்த நற்பெயரையும் இழப்பர். பேரரசராயினும் கள்ளுண்டு வெறித்த விடத்துச் சிறு பிள்ளையாலும் எளிதாய்க்கொல்லப் படுவராதலாலும், அந்நிலைமையடையுமாறு எவ்வேளையிலும் உட்பகைவராற் கள்ளூட்டப்படுவராதலாலும், எஞ்ஞான்றும் 'உட்கப்படார்' என்றும், ஒழுக்கக்கேடும் மானக்கேடும் பற்றி இகழப்படுவராதலால் 'ஒளியிழப்பர்' என்றும் கூறினார். 'படாஅர்' இசைநிறையளபெடை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


போதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறரால் நேசிக்கப் படமாட்டர், தனது சுய ஆற்றலையும் இழப்பார் எப்பொழதும் கள் மீது ஆர்வம் கொண்டு வாழ்பவர்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


கள்ளின் மேல் ஆசை கொண்ட அரசர்கள், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார்; தம் முன்னோரால் அடைந்திருந்த புகழ் என்னும் ஒளியையும் இழந்து விடுவார்கள்.

Thirukkural in English - English Couplet:


Who love the palm's intoxicating juice, each day,
No rev'rence they command, their glory fades away.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).

ThiruKural Transliteration:


utkap pataaar oLiyizhappar eGnGnaandrum
katkaadhal koNtozhuku vaar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore