திருக்குறள் - 1192     அதிகாரம்: 
| Adhikaram: thanippatarmikudhi

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.

குறள் 1192 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vaazhvaarkku vaanam payandhatraal veezhvaarkku" Thirukkural 1192 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


காதலித்தார்க்குக் காதலிக்கப்பட்டார் அருளும் அருள், உயிர் வாழ்வார்க்கு, மழை பெய்தாற்போலும்; அஃதில்லார்க்கு வாடுதலே யுள்ளது. இது நின்மேனி பொலிவழிந்த தென்னும் தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி - அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தால், தம்மை இன்றியமையா மகளிர்க்கு அவரை இன்றியமையாக் கணவர் அளவறிந்து வந்து செய்யும் தலையளி; வாழ்வார்க்கு வானம் பயந்தற்று - தன்னையே நோக்கி உயிர் வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்தாற் போலும். ('நம் காதலர் நம்மை விழையாமையின், அத்தலையளி இல்லையாகலான், மழை வறந்துழி அதனான் வாழ்வார் போல இறந்து படுதலே நமக்கு உள்ளது' என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இ-ரை,) வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி-அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்துபோன கணவர் தம்மையின்றியமையாத மகளிர்க்கு, காலமறிந்து வந்து இன்புறுத்தும் பேரன்புக் கூட்டம்;வாழ்வார்க்கு வானம் பயந்த அற்று-தன்னையே நோக்கி வாழும் மாந்தருக்கு முகில் காலம் அறிந்து பெருமழை பொழிந்தாற் போலும். நம் காதலர் நம்மீது அன்புகொள்ளாமையால் அவர் வந்து கூடப்பெறாது, மழையின்றி வாடும் மாந்தர் போல வாடுகின்றோம் என்பதாம். ’ஆல்’ அசைநிலை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அவர் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, அவள் இன்றி அமையாத கணவர் காட்டும் அன்பு, தன்னை நோக்கி உயிர்வாழும் உலகத்தவர்க்கு வானம் உரிய நேரம் மழை தந்தது போலாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வாழ்வதற்கு வானம் நன்மை பயப்பது போல் காதலில் வீழ்பவற்கு வீழ்பவரே நன்மை அளிக்கின்றார்கள்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தம்மை விரும்புபவருக்கு, அவரை விரும்புகிற காதலர் அளிக்கும் அன்பானது, உயிர்வாழ்பவருக்கு, வானம் மழை பெய்து உதவினாற் போன்றது ஆகும்.

Thirukkural in English - English Couplet:


As heaven on living men showers blessings from above,
Is tender grace by lovers shown to those they love.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it.

ThiruKural Transliteration:


vaazhvaarkku vaanam payandhatraal veezhvaarkku
veezhvaar alikkum ali.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore