தாமதமாகப் பேசுவது, திக்கிப் பேசுவது. இந்த இரண்டுக்கும் மருத்துவத்தில் தீர்வு உண்டு தெரியுமா?

Updated On

சில குழந்தைகள் மூன்று அல்லது நான்கு வயது வரைகூட பேச ஆரம்பிக்காமல் இருப்பார்கள் கவனித்திருக்கிறீர்களா? ‘அவன் அப்பா அஞ்சு வயசுலதான் பேச ஆரம்பிச்சான். இவனும் அந்த மாதிரி பேசிடுவான்’ என்று சிம்பிளாக முடித்துவிடுவார்கள், வீட்டில் இருக்கும் பெரியவர்கள். திக்கிப் பேசும் குழந்தைகளை ‘திக்குவாயன்’ எனச் சொல்லி, அறியாமையால் அப்படியே விட்டுவிடுகிறவர்களும் உண்டு. ஆனால், இதற்கெல்லாம், ஆங்கில மருத்துவத்தில் ‘ஸ்பீச் தெரபி’ உள்ளிட்ட பல சிகிச்சைகள் தீர்வாக உள்ளது. இன்னொரு பக்கம். நம் பாரம்பர்ய சித்த மருத்துவத்தில் காலதாமதமாக பேசுவதுக்கும் திக்கிப் பேசுவதுக்கும் தீர்வு இருக்கிறது.

`ஐம்புலன்களில் செவிக்கும் வாய்க்கும், அதாவது காதுக்கும் நாவுக்கும் தொடர்பு இருக்கிறது. ஒரு குழந்தைக்குத் தெளிவாகக் காது கேட்டால், அந்தக் குழந்தை சீக்கிரமே பேச ஆரம்பித்துவிடும். காது மந்தமாக இருந்தால், பேசுவதில் குறை இருக்கும். இதற்கான காரணம், மூளையில் இருக்கிறது. ஒரு குழந்தையின் காதில், ‘அம்மா’ என்ற வார்த்தை முதலில் கேட்கப்பட வேண்டும். பிறகு, குழந்தை அம்மாவைப் பார்க்கும். பிறகுதான் ‘அம்மா’ என்று அழைக்கும். இந்த மூன்று ஏரியாவையும் வளப்படுத்தும் மூளைப் பகுதி, சரியான ஊட்டத்துடன் வளரவில்லை என்றால், காது மந்தமாகி பேச்சு வராது. அல்லது தாமதமாகும்.

பேச்சுத் தொடர்பான மூளைப் பகுதி ஏன் ஊட்டத்தோடு வளரவில்லை? தாய்ப்பாலில் போதிய ஊட்டம் இல்லையென்றாலும், குழந்தையின் மூளை வளர்ச்சிக்குப் போதுமான கொழுப்புச்சத்து இல்லையென்றாலும், இந்தப் பிரச்னை வரும்.

குழந்தையின் மூளையைத் தூண்டி பேசவைக்க ஆள் இல்லாதது. இன்றைய காலகட்டத்தில் ‘அம்மாவைப் பாரு’, ‘அப்பாவைப் பாரு’ எனக் குழந்தையின் பக்கத்தில் உட்கார்ந்து யாரும் பயிற்சி அளிப்பதில்லை. அதற்கான நேரமோ, தாத்தா- பாட்டி போன்ற உறவோ இருப்பதில்லை. குழந்தைகளுடன் அம்மாவும் அப்பாவும் தொடர்ந்து பேசினால்தான் குழந்தையின் மூளைத் தூண்டப்படும்.

மூன்றாவது காரணம், குழந்தையின் தொண்டையில் அழற்சி, நாக்குத் தொடர்பான நரம்புகளில் கோழைக் கட்டுதல், நரம்பு திசுக்களின் வளர்ச்சிக் குறைவு போன்ற பிரச்னைகள் இருந்தால், நாக்குப் புரள்வது குறைந்து, பேச்சு தாமதப்படும்” எனக் காரணங்களை அடுக்கியயவர், தீர்வுகளையும் சொல்கிறார்.

“பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிந்துவிட்டால், தீர்ப்பது சுலபம். தாய்ப்பாலின் மூலம் போதுமான கொழுப்புச்சத்து கிடைக்காத குழந்தைகளுக்கு, ஆறாம் மாதத்திலிருந்து பருப்பும் பசு நெய்யும் சேர்த்து ஊட்டினால், மூளைக்குப் போதுமான கொழுப்புச்சத்து கிடைக்க ஆரம்பித்துவிடும்.

குழந்தை வளர்ந்து ஒன்றரை அல்லது இரண்டு வயது வரை எதுவும் பேசவில்லையெனில், சித்தாவில் இருக்கும் வல்லாரை நெய், நீர் பிரம்மி நெய் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனையுடன் தரலாம். வல்லாரை கீரையைப் பொடியாகவோ, பொரியலாகவோ சாப்பிட்டால் மூளைக்கு எந்த விதத்திலும் பயன் தராது. நெய்யில் முருங்கைக் கீரையைக் காய்ச்சுவதுபோல வல்லாரை கீரையைக் காய்ச்சித் தந்தால்தான் பலன் கிடைக்கும். ஏனென்றால், வல்லாரையில் நெய்த்தன்மை இருந்தால்தான், அது மூளையில் போய் சேரும். முக்கியமான விஷயம், வல்லாரை மாத்திரைகள் வடிவில் கொடுக்கப்படுவது மூளைக்குப் பயன்படுவதே இல்லை.

தொண்டையில் அழற்சி, நாக்குத் தொடர்பான நரம்புகளில் கோழைக் கட்டுதல், நரம்பு திசுக்களின் வளர்ச்சிக் குறைவு பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு. நான்கைந்து பூண்டுகளை அரைத்துத் துணியில் தடவி, அனலில் காட்டும்போது சாறு வரும். இந்தச் சாற்றுடன் சமஅளவு தேன் சேர்த்து, குழந்தைகளின் அடி நாக்கில் தடவி வந்தால், படிப்படியாகச் சரியாகும். இந்தச் சிகிச்சையைக் குழந்தைக்கு ஒரு வயது நிறைவுக்குப் பிறகு மருத்துவரிடம் கேட்டுச் செய்வதே நல்லது. பால் குடிக்கும் குழந்தைகள், சில நேரங்களில் பால் குடிக்க மறுக்கும். காரணம், தொண்டைச் சிவந்து டான்சிலில் அவஸ்தை இருக்கும். இதற்கும் பூண்டுத் தேன் நல்ல தீர்வு.

7, 8 வயது வரையிலும் பேச்சு வராத குழந்தைகளுக்கு, மூளை திசுக்களைத் தூண்டிவிடும் அடுத்த லெவல் சிகிச்சை தர வேண்டும். சிவன் கோயிலில் சிவன் சிலைக்கு மேல் சட்டிவைத்து, தண்ணீரைச் சொட்டு சொட்டாக விடுவார்கள் இல்லையா? அதுபோல, மருந்து எண்ணெய்யைச் சொட்டு சொட்டாகக் குழந்தைகளின் தலையில் விடுவோம். இந்தச் சிகிச்சையின் மூலம் பேச ஆரம்பித்த குழந்தைகள், பின்னாளில் சிறப்புப் பள்ளிகளிலிருந்து மாறி, நார்மல் பள்ளிகளில் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

திக்கிப் பேசும் குழந்தைகளுக்கு, நாட்டுக்கோழி முட்டையை அவித்து, மஞ்சள் கருவை மட்டும் அனலில் காட்டும்போது ஒரு வகை எண்ணெய் வரும். இதை, அண்டத்தைலம் என்பார்கள். இந்தத் தைலம் திக்குவாய் பிரச்னையைச் சரிசெய்யும். பக்கவாதத்தினால் பேசமுடியாதவர்களுக்கும் அண்டத்தைலமே சித்தாவில் சிகிச்சை. தாளிசாதி சூரணமும் திக்குவாயைச் சரிசெய்யும்.

 



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore